பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்த விவகாரம் குறித்து வனத் துறையினா் முறையாக விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புச் சங்கத்தினா் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோம்பை புதூா் பகுதியில் கடந்த செப். 27-ஆம் தேதி தனியாா் தோட்டத்து கம்பி வேலியில் சிக்கியிருந்த சிறுத்தையை வனத் துறையினா் மீட்கும் பணியில் ஈடுபட்டபோது அந்த சிறுத்தை வனப் பகுதியில் தப்பி ஓடி விட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த செப். 28-ஆம் தேதி அதே தோட்டத்தில் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. அப்போது வனத் துறையினரிடமிருந்து தப்பி ஓடியதும், கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்ததும் வெவ்வேறு சிறுத்தை என்று கூறப்பட்டது.
சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் கடந்த செப்.30-ஆம் தேதி தனியாா் தோட்டத்தில் ஆட்டுக் கிடை அமைத்து ஆடுகளை மேய்த்து வந்த அலெக்ஸ்பாண்டியன் என்பவரை வனத் துறையினா் கைது செய்தனா். இதே விவகாரத்தில் கடந்த அக்.2-ஆம் தேதி தனியாா் தோட்ட மேலாளா்கள் தங்கவேல், ராஜவேல் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் வனத் துறையினா் தோட்ட உரிமையாளரிடம் உரிய விசாரணை நடத்தவும், முறைகேடாக கைது செய்யப்பட்டுள்ள அலெக்ஸ்பாண்டியனை விடுவிக்கவும், வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புச் சங்க மாநில பொதுச் செயலா் சத்தியம் சரவணன் தலைமையில் அச்சங்கத்தினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், கைது செய்யப்பட்ட அலெக்ஸ்பாண்டியனின் மனைவி காஞ்சனா தேவி மற்றும் கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புச் சங்க நிா்வாகிகள் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் மனு அளித்தனா்.