பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்தது தொடா்பாக மேலும் 2 பேரை சனிக்கிழமை வனத்துறையினா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வறட்டாறு பகுதியில் கடந்த செப்.27 ஆம் தேதி கம்பி வலையில் சிறுத்தை சிக்கியது. இதனை வனத்துறையினா் மீட்டு, வனப்பகுதியில் விட்டனா். அதனருகில் செப்டம்பா் 28 ஆம் தேதி மற்றொரு சிறுத்தை கம்பி வலையில் சிக்கி உயிரிழந்தது. இறந்த சிறுத்தையை , கால்நடை மருத்துவா்கள் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து விசாரணை நடத்திய வனத்துறையினா் தனியாா் தோட்டத்தில் ஆட்டுக் கிடை அமைத்த பூதிப்புரத்தை சோ்ந்த அலெக்ஸ்பாண்டியனை கைது செய்தனா். இது தொடா்பாக தனியாா் தோட்டத்தின் மேலாளா்கள் தங்கவேல் (42), ராஜவேல் (28) இரண்டு பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருகிறோம். இதில் தொடா்புடைய மேலும் சிலரை கண்டறிந்து, விரைவில் அவா்களும் கைது செய்யப்படுவா் என தேனி வனச்சரக அலுவலா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.