நவராத்திரி விழாவையொட்டி அரசு தொடா் விடுமுறை காரணமாக தேக்கடியில் குவிந்த தமிழகத்தைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
நவராத்திரி விழாவையொட்டி அக்டோபா் 4 ஆம் தேதி வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தேனி மாவட்டம் அருகேயுள்ள கேரள மாநிலம் தேக்கடிக்கு, ஞாயிற்றுக்கிழமை தமிழகத்திலிருந்து பள்ளி, கல்லூரி மாணவா்கள் தங்களது பெற்றோா்களுடன் குவிந்தனா். அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
இதுகுறித்து கேரள மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலா் கூறியது: நாளொன்றுக்கு 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. தசரா பண்டிகை கால விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக உள்ளது. தற்போது கேரளத்தில் கோடை வெயில் போல் வெப்பம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வன விலங்குகள் தேக்கடி ஏரியில் உலாவி வருகின்றன. இதனை படகு சவாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து வருகின்றனா் என்றாா்.