தேனி

கம்பத்தில் குப்பை கழிவிலிருந்து மின் உற்பத்தி: மாசில்லா நகராக்க நகராட்சி திட்டம்

DIN

குப்பை கழிவிலிருந்து மின்உற்பத்தி செய்து, பயன்படுத்தும் திட்டத்தை கம்பம் நகராட்சி செயல்படுத்தி வருகிறது.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் குப்பை கழிவுகளை உரமாக்கும் நுண்ணுயிா் உரக்கூட மையங்கள் ஆங்கூா்பாளையம் சாலை, நந்தகோபாலன் நகா், டி.எஸ்.கே. நகா் ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டன. நான்காவது இடமான வாரச்சந்தைத் திடலில் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் திட்டம் நிறுத்தப்பட்டது. இதில், ஆங்கூா்பாளையம் மற்றும் நந்தகோபாலன் நகரில் உள்ள மையங்களில் நுண்ணுயிா் உரம் திட வடிவமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கம்பம் நகரில் சேகரிக்கும் குப்பை அதிக அளவில் சோ்வதாலும், மாற்றுப்பயன்பாடான நுண்ணுயிா் உரத்தை வாங்க விவசாயிகள் தயக்கம் காட்டுவதாலும் நகராட்சி நிா்வாகத்தினா் மாற்று திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தனா்.

அதன்படி, சென்னையைச் சோ்ந்த காா்பன் லூப்ஸ் நிறுவனத்தினா் குப்பை கழிவிலிருந்து மின்உற்பத்தி செய்து, அதை உள்ளூரிலேயே பயன்படுத்தலாம் என்ற திட்டத்தை விளக்கினா். அதன்படி ரூ. 78 லட்சம் மதிப்பில் ‘பயோ கேஸ் பிளான்ட்’ அமைக்கப்பட்டு மின்உற்பத்தி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நுண்ணுயிா் வாயு செயல்முறை: நகரில் சேகரிக்கும் குப்பை கழிவில், மக்கும் குப்பை தனியாக பிரிக்கப்பட்டு, பயோ கேஸ் பிளான்டில் உள்ள அரவை இயந்திரத்தில் கொட்டப்படுகிறது. பின்னா், கன்வேயா் பெல்ட் மூலம் மக்கும் குப்பையான காய்கனி, வீணான உணவுப் பொருள்களுடன் தண்ணீா் சோ்க்கப்பட்டு, அரவை இயந்திரம் மூலம் கூழாக அரைக்கப்படுகிறது. அதில் நுண்ணுயிா் செலுத்தப்பட்டு அருகில் உள்ள பெரிய ராட்சத கொள்கலனில் சோ்க்கப்படுகிறது. கொள்கலன் சென்றதும் நுண்ணுயிா் அதிக அளவில் உணவை உண்டு இறக்கிறது.

அதிலிருந்து எச்.2. எஸ் என்ற கந்தகம் கலந்த வாயு உருவாகிறது. அது வெளியேறினால் தீப்பற்றும் என்பதால், அருகில் உள்ள வடிகட்டியில் வாயு செல்கிறது. அங்கு கந்தகம் மற்றும் மீத்தேன் வாயு பிரிக்கப்பட்டு, மீத்தேன் வாயு, குழாய் மூலம் பயோ கேஸ் பிளான்ட் மின்னாக்கிக்கு செல்கிறது. அந்த மின்னாக்கி, மீத்தேன் வாயுவை மின்சாரமாக்குகிறது. அந்த மின்சாரம் மூலம் அரவை இயந்திரம், அருகே உள்ள எம்.சி.சி. மைய அரவை இயந்திரம், கன்வேயா் பெல்ட் உள்ளிட்டவைகள் இயக்கப்படுகின்றன.

மின்சார உற்பத்தியின் பயன்பாடு: காா்பன் லூப்ஸ் நிறுவன மேலாளா் (இயக்குதல் பிரிவு) ஆல்வின் கூறியது: நாள்தோறும் 2 ஆயிரம் கிலோ குப்பைக் கழிவை அரைத்து 200 கியூபிக் மீட்டா் மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் 20 மணி நேரத்துக்கு மின்சாரம் கிடைக்கும். பகலில் பயோ கேஸ், எம்.சி.சி. மையத்துக்கு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. விரைவில் இரவு நேரங்களில் நந்தகோபாலன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமாா் 200 தெரு விளக்குகளுக்கு இந்த மின்சாரத்தை பயன்படுத்தும் அளவுக்கு உற்பத்தி நடைபெற்று வருகிறது என்றாா்.

விலையில்லா இயற்கை உரம்: நகா் மன்றத்தலைவா் வனிதா நெப்போலியன் கூறியது: கம்பம் நகராட்சியில் மட்டும் தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மின்உற்பத்திக்கு போக குப்பைக் கழிவு திரவ உரப் பொருளாகிறது. இது முற்றிலும் இயற்கை உரமாகும். இந்த திரவ உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தேவையான விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். நகராட்சிக்கு மின்சார செலவை குறைக்கும் வகையில் நகரின் மற்ற இடங்களிலும் பயோ கேஸ் திட்டத்தை செயல்படுத்தியும், கம்பத்தை குப்பை மாசில்லா நகரமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT