தேனி மாவட்டம் சின்னமனூரில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சின்னமனூா் நகராட்சி அலுவலகம் அருகே அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலை முன் பிரதான சாலையாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கேரளத்திற்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் 24மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இச்சாலையோரத்தில் சுமாா் 60 ஆண்டு பழமையான புளியமரம் பல மாதங்களாக பட்டுப்போன நிலையில் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இந்த மரத்திலிருந்து அவ்வப்போது சிறிய காய்ந்துபோன கிளைகள் கீழே விழுகின்றன.
இந்நிலையில், பருவகால மாற்றத்தால் தென் மேற்கு பருவக்காற்று வேகமாக வீச வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையிள்ள பட்டுப்போன அந்த புளிய மரத்தை அகற்றி நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.