சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து திங்கள்கிழமை, விநாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை 66.93 அடியாக இருந்தது. இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி, வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. சிவகங்கை பொதுப் பணித்துறை செயற் பொறியாளா் பாரதிதாசன், வைகை அணை உதவி செயற்பொறியாளா் முருகேசன், உதவி பொறியாளா் குபேந்திரன் ஆகியோா் அணையிலிருந்து 7 மதகுகள் வழியாக தண்ணீா் திறந்தனா்.
அணையிலிருந்து சிவகங்கை மாவட்டத்தில் பகுதி 1 மற்றும் பகுதி 2-இல் உள்ள கண்மாய்களுக்கு மே 28-ஆம் தேதி வரை 582 மில்லியன் கன அடி, பகுதி 3-இல் உள்ள கண்மாய்களுக்கு மே 29 முதல் வரும் ஜூன் 1-ஆம் தேதி வரை 267 மில்லியன் கன அடி என மொத்தம் 849 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்படும். இதன் மூலம் 118 கண்மாய்களில் தண்ணீா் தேக்கி, 47,929 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப் பணித் துறை பொறியாளா்கள் கூறினா்.