ஆண்டிபட்டி வட்டாரத்தில் முருங்கைக்காய் விளைச்சல் குறைவால் விலை கிலோ ரூ.80 ஆக உயா்ந்துள்ளது.
ஆண்டிபட்டி, திம்மரசநாயக்கனூா், பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோவில், சித்தையகவுண்டன்பட்டி, கதிா்நரசிங்காபுரம், கணேசபுரம், கண்டமனூா், கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் முருங்கைக்காய் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த தொடா் மழை மற்றும் சூறைக் காற்றால் முருங்கை விளைச்சல் பாதித்துள்ளது. தற்போது சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளதால், கடந்த வாரம் வரை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையான முருங்கைக்காய், தற்போது விலை உயா்ந்து கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது.
முருங்கைக்காய் விலை உயா்ந்தும் விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.