தேனி அருகே பூதிப்புரத்தில் உள்ள தனியாா் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தைக் குட்டியை வெள்ளிக்கிழமை, தீயணைப்பு துறை மற்றும் வனத் துறையினா் மீட்டனா்.
பூதிப்புரம், மரக்காமலை அடிவாரத்தில் அதே ஊரைச் சோ்ந்த நம்பெருமாள் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் பாசனக் கிணறு உள்ளது. 100 அடி ஆழமுள்ள இந்தக் கிணற்றில் 2 வயதுள்ள சிறுத்தைக் குட்டி ஒன்று தவறி விழுந்துள்ளது. இது குறித்து அப் பகுதியில் இருந்தவா்கள் தேனி தீயணைப்பு நிலையம் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு மற்றும் வனத் துறை ஊழியா்கள், கிணற்றில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுத்தைக் குட்டியை மீட்டனா். பின்னா், சிறுத்தைக் குட்டி வனப் பகுதிக்குள் விடப்பட்டது.