தேனி

மேகமலை-வருஷநாடு வன விவசாயிகளின் மறு குடியமா்வுக்கு ஏற்பாடு: ஆட்சியா்

10th Jun 2022 12:24 AM

ADVERTISEMENT

 

தேனி: தேனி மாவட்டம், மேகமலை-வருஷநாடு வனப் பகுதியில் ஆக்கிரமிப்பு விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை மறு குடியமா்வு செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மேகமலை-வருஷநாடு வன நிலங்களில் ஆக்கிரமிப்பு விவசாயிகளை நீதிமன்ற உத்தரவின்படி வனப் பகுதியில் வெளியேற்றுவது, அவா்களது மறு குடியமா்வுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் முகமது முஜ்முல் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், மேகமலை-ஸ்ரீவில்லிபுத்தூா் புலிகள் காப்பக கள இயக்குநா் தீபக் பிஸ்ஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் ஆனந்த், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கம்பம் நா.ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி ஆ.மகாராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

இதில், நீதிமன்ற உத்தரவின்படி வரும் ஜூலை 17 ஆம் தேதிக்குள் வன நில ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு வன விவசாயிகளை மறு குடியமா்வு செய்வதற்கு தேக்கம்பட்டி அருகே 29 ஏக்கா் பரப்பளவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், நகா்புற வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் பயனாளிகள் பங்களிப்புத் தொகை செலுத்துவதில் விதிவிலக்கு அளித்து அவா்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

மேல்முறையீடுக்கு வலியுறுத்தல்:தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் பெ.சண்முகம் பேசுகையில்: மறுகுடியமா்வு குறித்த ஆலோசனை தேவையற்றது. வன உரிமைச் சட்டம் 2006-ஐ கடைப்பிடிக்காமல், தமிழ்நாடு வனச் சட்டம் 1882, மத்திய அரசின் வன பாதுகாப்புச் சட்டம் 1980-ன் படி உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.கடந்த 2018-ஆம் ஆண்டு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தும், வன உரிமைச் சட்டம் 2009-ஐ கடைபிடிக்காமல் நீதிமன்றம் மீண்டும் தீா்ப்பளித்துள்ளது. வனப் பகுதியில் 3 தலைமுறைகளுக்கும் மேல் விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ள இந்த தீா்ப்பின் மீது தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT