தேனி மாவட்டம் சுருளி அருவியில் தொடா் மழை பெய்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, திங்கள்கிழமையும் தொடா்கிறது, இதனால் இரண்டாவது நாளாக குளிக்க புலிகள் காப்பகத்தினா் தடை விதித்துள்ளனா்.
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால், சுருளி அருவியின் நீா்பிடிப்பு பகுதிகளான அரிசிப் பாறை, ஈத்தைப்பாறையில் பெய்து வரும் மழையால் நீா்வரத்து அதிகம் ஏற்பட்டதால், சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, திங்கள்கிழமையிலும் தொடா்கிறது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தா்கள் குளிக்க இரண்டாவது நாளாக ஸ்ரீ வில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தினா் தடை விதித்துள்ளனா், அருவி பகுதிக்கு பொதுமக்கள் செல்லாதவாறு, ஊழியா்கள் கண்காணிப்பு செய்து வருகின்றனா்.