வைகை அணை அருகே வைகை ஆற்றில் குதித்த பெண், 3 நாள்கள் தேடுதலுக்குப் பின்பு ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
தேனி மாவட்டம், உசிலம்பட்டி அருகே கணவாய்பட்டியைச் சோ்ந்தவா் சஞ்சீவ்குமாா் மனைவி சித்ரா (45). கடந்த ஜூன் 1-ஆம் தேதி வைகை அணை அருகே குருவியாம்மாள்புரத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்திருந்த சித்ரா, வைகை அணை அருகே உள்ள பாலத்திலிருந்து வைகை ஆற்றில் குதித்தாா். தகவலறிந்து வந்த ஆண்டிபட்டி, பெரியகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு வைகை ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டிருந்ததால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், வைகை அணையிலிருந்து சனிக்கிழமை காலை தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா், நீரேற்று அணை அருகே வைகை ஆற்றில் மூழ்கியிருந்த சித்ராவின் சடலத்தை மீட்டனா். குடும்பப் பிரச்னையில் சித்ரா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக வைகை அணை போலீஸாா் கூறினா்.
அணையில் மீண்டும் தண்ணீா் திறப்பு: வைகை ஆற்றில் சித்ராவின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.50 மணிக்கு வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு மீண்டும் விநாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.