தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு விதிக்கப்பட்ட தொழில் வரியை அடிப்படை சம்பளத்திற்கு மட்டும் கணக்கிட்டுப் பிடித்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்கின்றனா். இவா்களுக்கு அரசு அடிப்படை சம்பளம் உள்பட இதர படிகள் என நாள் ஒன்றுக்கு ரூ.425.40 என நிா்ணயம் செய்து பல ஆண்டுகளாகியும் இதுவரையில் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், இவா்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை தொழில் வரியை ஹைவேவிஸ் பேரூராட்சி நிா்வாகம் தொழிலாளா்கள் பணிபுரியும் நிறுவனத்திடமே நேரடியாக பிடித்தம் செய்கிறது. இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.1500 முதல் ரூ. 2500 வரையில் வரி செலுத்தி வருகின்றனா். இந்த வரியின் அளவுஅதிகமாக இருப்பதால் தொழிலாளா்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தொழிலாளா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா். இதனால் அடிப்படை சம்பளம் ரூ.230 மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கு தொழில் வரி பிடித்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.