கூடலூா் விதைப் பண்ணையில் பாரம்பரிய நெல் விதையான குறுவை 60 ரகத்தை சாகுபடி செய்ய வேளாண்மைத்துறை மூலம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது இரண்டாம் போக சாகுபடி நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் விதைப்பண்ணை கூடலூரில் தாமரைகுளம் பகுதியில் உள்ளது.
இங்கு நடப்பாண்டில் பாரம்பரிய நெல் ரகமான குறுவை 60 ரகம் சாகுபடி செய்ய வேளாண்மை துறை முடிவு செய்து, அதன்படி 5 ஏக்கரில் நடவு செய்யப்பட உள்ளது.
இது பற்றி உதவி வேளாண் அலுவலா் கணேசன் கூறியது: தற்போது இரண்டாம் போக சாகுபடியாக நாற்று நடவு முடிந்துள்ளது. மாநில அரசின் உத்தரவுப்படி மாவட்ட விதைப்பண்ணையில் பாரம்பரிய நெல் ரகம் சாகுபடி செய்ய வேண்டும். அதன் பேரில் பாரம்பரிய ரகமான குறுவை 60, ஐந்து ஏக்கரில் சாகுபடி செய்யபட உள்ளது. முதல்கட்டமாக இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ரக நெல்லை நடவு செய்த 60 நாளில் அறுவடை செய்யலாம் என்றாா்.