தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அனுசரிக்கப்பட்டதால், போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அரசு கடந்த ஜனவரி 6-ஆம் தேதி முதல் இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, 3ஆவது வார முழு ஊரடங்கை முன்னிட்டு, தேனியில் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
வா்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருந்தன. மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பால் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. சரக்கு வாகனப் போக்குவரத்தும் குறைந்து காணப்பட்டது.
மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. நெடுஞ்சாலை மற்றும் பிரதானச் சாலை சந்திப்புகளில் காவல் துறையினா், உள்ளாட்சி அமைப்பு மற்றும் பொதுச் சுகாதாரத் துறை அலுவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அவசியத் தேவைகளின்றி இரு சக்கர வாகனத்தில் செல்வோரை போலீஸாா் எச்சரித்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பினா்.
பெரியகுளம்
இங்குள்ள கடை வீதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து இல்லாததால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
கம்பம்
தமிழக அரசு போல், கேரள மாநில அரசும் 5 மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால், தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச் சாலைகள் அடைக்கப்பட்டன. எல்லை சோதனைச் சாவடிகளை அடைத்து, இரு மாநில போலீஸாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அத்தியாவசியப் பொருள்களான பால் உள்ளிட்டவை கொண்டுசென்ற லாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு, தேனி மாவட்டத்திலிருந்து நாள்தோறும் வேலைக்குச் செல்லும் பல ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளா்கள் வீட்டிலேயே முடங்கினா்.
கம்பம் நகா் பிரதான சாலைகளில் போலீஸாா் வாகனங்கள் எதுவும் சென்றுவிடாமல் தடுக்கும் வகையில் காவல் துறையினா் இரும்பு தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனா். மேலும், வாகனங்களில் வந்தவா்களிடம் விசாரணை செய்து திருப்பி அனுப்பி வைத்தனா். நகரின் சில பகுதிகளில் மருந்துக் கடைகள், தனியாா் மருத்துவமனை மட்டுமே செயல்பட்டன. ஆட்டோ, காா் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை.
தமிழக எல்லையில் உள்ள குமுளி சாலை, லோயா் கேம்ப் பகுதியிலேயே அடைக்கப்பட்டது. அதேபோல், கேரள மாநிலம் குமுளியில் கடைகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் அடைக்கப்பட்டன. வாடகை வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
உத்தமபாளையம்
உத்தமபாளையம், சின்னமனூரில் பெரும்பான்மையான சாலைகள் வெறிச்சோடின. கடந்த வாரங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. தவிர, மருந்துவமனைகள், மருந்தகங்கள், உணவகங்கள், பால் விநியோகம், பெட்ரோல் பங்க் உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்பட்டன.