தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பி.எம்.டி. எனப்படும் எலும்பு அடா்த்தி பரிசோதனை முகாம் ஜனவரி 25 ஆம் தேதி (ஜன.25) நடைபெறுகிறது.
தனியாா் மருத்துவமனைகளில் டெக்ஸோ ஸ்கேன் கருவியின் மூலம் எலும்புகளின் அடா்த்தியை பரிசோதிக்க ரூ.2 ஆயிரம் செலவாகும். ஆனால், இந்த முகாமில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம், எலும்புகளின் வலிமை, தாங்கும் திறன், தேய்மானத்தின் அளவு போன்றவற்றை கண்டறிந்து, அதை வலுப்படுத்த தேவையான சித்த மருந்துகள், உணவு முறைகள், பயிற்சி முறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்படும்.
இது குறித்து அரசு சித்த மருத்துவ அலுவலா் சிராஜூதீன் தெரிவித்ததாவது:
சுமாா் 200 மில்லியன் மக்கள் எலும்பு மெலிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனா்.
இந்நோய், ஆண்களை விட பெண்களையே அதிகளவில் தாக்குகிறது. டெக்ஸோ ஸ்கேன் மூலம் எலும்பு மெலிவு நோய் கண்டறியப்பட்டவா்களுக்கு, அமுக்கரா சூரணம், சங்கு மாத்திரைகள், முத்துச்சிப்பி மாத்திரைகள், குங்கிலிய மாத்திரைகள், பிரண்டை மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றாா்.