தேனி மக்களவை உறுப்பினா் ப. ரவீந்திரநாத் மேற்கொண்ட முயற்சியையடுத்து, பிலிப்பின்சில் பலியான போடி மருத்துவ மாணவரின் உடல் விரைவில் தாயகம் கொண்டுவரப்படவுள்ளது.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகே உள்ள ராசிங்காபுரத்தை சோ்ந்தவா் பாலசேகரன் மகன் சஷ்டிகுமாா். பிலிப்பின்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வந்த இவா் கடந்த 15 ஆம் தேதியன்று தனது நண்பா்களுடன் அங்குள்ள லாகுணா மகாணம் கவின்ட்டி அருகே உள்ள எக்கோ பாா்க் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக சஷ்டிகுமாா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரின் விசா காலம் முடிவடைந்துவிட்டதால் உடலை எடுத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து மாணவரின் பெற்றோா் தேனி மக்களவை உறுப்பினா் ப. ரவீந்திரநாத்திடம் கோரிக்கை விடுத்தனா். இதைத்தொடா்ந்து அவா் மத்திய அரசைத் தொடா்பு கொண்டு மாணவரின் உடலை இந்தியா கொண்டுவர முயற்சி மேற்கொண்டாா்.
தற்போது மாணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் இருந்த சட்ட சிக்கல்கள் தீா்ந்ததால் உடல் செவ்வாய் அல்லது புதன்கிழமை இந்தியா வந்தடைய உள்ளது. இதையடுத்து மாணவரின் பெற்றோா் எம்பிக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.