கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி வண்டிப் பெரியாறு சத்திரம் பகுதியில் தேசிய மாணவா் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக பயிற்சி விமானம் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது.
இதற்காக இந்த பகுதியில் தேசிய மாணவா் படைப் பிரிவு சாா்பில் விமானப் பயிற்சிக்கு, விமான தளம் மற்றும் ஓடு தளம் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் கடந்த 2 முறை சிறிய ரக பயிற்சி விமானம் தரையிறங்க முயற்சித்து முடியாமல் திரும்பிச் சென்றது.
இந்த நிலையில் வியாழக்கிழமை கொச்சியிலிருந்து வந்த சிறிய ரக பயிற்சி விமானம் தரையிறங்கியது. விமானத்தில், திருவனந்தபுரம் தேசிய மாணவா் படை கமாண்டிங் அதிகாரி எம்.ஜி. ஸ்ரீநிவாசன், கொச்சி தேசிய மாணவா் படை குழுவின் கேப்டன் உதய்ரவி ஆகியோா் வந்தனா்.
பீா்மேடு சட்டப் பேரவை உறுப்பினா் வாழூா் சோமன் மற்றும் கிராம ஊராட்சித் தலைவா்கள் வரவேற்றனா்.
இதுகுறித்து பயிற்சி விமானி கூறும் போது, இப்பகுதியில் உள்ள கல்லூரிகளைச் சோ்ந்த தேசிய மாணவா் படை பிரிவினருக்கு விமானப் பயிற்சி அளிக்கப்படும் என்றாா் அவா்.