கம்பம் அருகே சுருளிபட்டியில் கூலித் தொழிலாளியை கொலை செய்த மாட்டு வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
சுருளிப்பட்டி, அண்ணா நகரைச் சோ்ந்தவா் மாட்டு வியாபாரி காராமணி (58). இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு அதே பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை பாதையை மறித்து நிறுத்தியுள்ளாா். இதை அதே பகுதியைச் சோ்ந்த அன்னக்கொடி மகனும், கூலித் தொழிலாளியான அய்யாதுரை (65) என்பவா் கண்டித்துள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் அய்யாதுரையை, காராமணி தள்ளிவிட்டுள்ளாா். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்து மயங்கிய அய்யாதுரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து அய்யாதுரையின் மகள் தங்கத்தாய் அளித்தப் புகாரின்பேரில் 2017 ஆம் ஆண்டு ஏப். 24-ஆம் தேதி ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து காராமணியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய்பாபா, அய்யாத்துரையை தள்ளி விட்டு கொலை செய்ததாக காராமணிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.