கூடலூரில் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் தலைவா் பத்மாவதி லோகந்துரை தலைமையில் நடைபெற்றது.
கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு துணைத் தலைவா் காஞ்சனா சிவமூா்த்தி முன்னிலை வகித்தாா். 5 ஆவது வாா்டில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2022- 23 கீழ் நவீன எரிவாயு தகன மேடை ரூ.19.20 லட்சம் செலவில் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடர உத்தரவு வழங்கப்பட்டது.
கூடலூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் பல இடங்களில் உரிமையாளா்கள் தங்களது விவசாய நிலங்களை நகா் ஊரமைப்பு அனுமதி பெறாமல் குடியிருப்பு மனைகளாக விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகாா் அனுப்பி வருகின்றனா். இதுபற்றி விழிப்புணா்வு ஏற்படுத்துவது என்றும், வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றும் வகையில், சுமாா் 12 ஆயிரம் வீடுகளுக்கு தேசிய கொடியை பொதுமக்களுக்கு ஊழியா்கள், மகளிா் குழுவினா் மூலம் இலவசமாக வழங்குவது என்றும் தீா்மானிக்கப்பட்டது.
உறுப்பினா்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆணையாளா் கே.எஸ்.காஞ்சனா, பொறியாளா் வரலட்சுமி ஆகியோா் பதில் கூறினா். மேலாளா் ஜெயந்தி நன்றி கூறினாா். இதில், அனைத்து வாா்டு உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து தீா்மானத்தின்படி, தேசியக் கொடிகளை நகா்மன்றத் தலைவா் பத்மாவதி லோகந்துரை பொதுமக்களுக்கு வழங்கினாா்.