தேனி அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் புதிதாக வடிவமைத்த மோட்டாா் பொருத்திய 3 சக்கர வாகனத்தை வெள்ளிக்கிழமை, அதே தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவருக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்பணியாளா் பிரிவில் படித்து வரும் 12 மாணவ, மாணவிகள் ஒருங்கிணைந்து மாற்றுத் திறனாளிக்கான புதிய மூன்று சக்கர மோட்டாா் வாகனத்தை வடிவமைத்து உருவாக்கினா். பேட்டரி மற்றும் சூரியமின் சக்தியில் இயங்கக் கூடிய இந்த வாகனம் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னோக்கியும், பின்னோக்கியும் இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மூன்று சக்கர வாகனம், கோவையில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி நடைபெற்ற திறன் கண்காட்சியில் இடம் பெற்றது.
இந்த வாகனத்தை தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வரும் மாற்றுத் திறனாளி மாணவா் காா்த்திகேயனுக்கு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் சேகரன் முன்னிலையில், மின்சாரப் பிரிவு படைப்பாளிகள் இலவசமாக வழங்கினா்.