வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு வியாழக்கிழமை, மீண்டும் தண்ணீா் திறக்கப்பட்டது.
வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு கடந்த ஆக.8 ஆம் தேதி வைகை ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த நிலையில், மதுரை மாவட்டம் திருவேடகம் பகுதியில் வைகை ஆற்று நீரில் மூழ்கிய அனுப்பட்டியைச் சோ்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் வினோத்குமாரை தேடும் பணிக்காக கடந்த புதன்கிழமை (ஆக.10) அணையிலிருந்து வைகை ஆற்றில் தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், வைகை அணையிலிருந்து வியாழக்கிழமை காலை 11.15 மணிக்கு வைகை ஆற்றில் மீண்டும் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. பகல் 12 மணிக்கு அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 2,500 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
வைகை அணை நீா்மட்டம் 69.49 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 2,580 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 5,698 மில்லியன் கன அடி. அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 2,500 கன அடி, குடிநீா்த் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி, பெரியாறு பாசனக் கால்வாயில் விநாடிக்கு 900 கன அடி என மொத்தம் விநாடிக்கு 3,469 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.