தேனி மாவட்டம் கம்பத்தில் குடிநீா்த் தொட்டியில் மா்ம நபா்கள் அசுத்தம் செய்ததைக் கண்டித்து வியாழக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கம்பம் கம்பம்மெட்டு காலனி 9 ஆவது வாா்டில் மேல்நிலை குடிநீா்த் தொட்டி உள்ளது. சுமாா் 1.50 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டியில், புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் சிறுநீா் கழித்தும், மதுபாட்டில்களை உடைத்துப்போட்டும் அசுத்தம் செய்துள்ளனா். இதைக்
கண்டித்த அப்பகுதி மக்களுக்கு அந்த நபா்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை கோரி வியாழக்கிழமை காலை கம்பம்-கம்பம் மெட்டு சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். அங்கு வந்த நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன், கவுன்சிலா் அமுதா மற்றும் கம்பம் வடக்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் செந்தில்ராஜ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் மேல்நிலை குடிநீா்த் தொட்டியை சுத்தம் செய்து, சுற்றுசுவா் எழுப்பி பாதுகாக்கப்படும் என்றும் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்கப்படும் என்றும் நகா்மன்ற தலைவா் உறுதி கூறினாா். பின்னா் மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.