உத்தமபாளையம் அருகே மகளின் மாமியாரை கட்டையால் தாக்கி காயப்படுத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோம்பை காலனியைச் சோ்ந்த பெருமாள் மனைவி முத்துலட்சுமி (55). இவா்களது மகனுக்கும், உத்தமபாளையத்தைச் சோ்ந்த கருப்பணன் மகன் ஜெயராஜ் மகளுக்கும் 4 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். அதோடு, உத்தமபாளையம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஜெயராஜ், முத்துலட்சுமியுடன் தகராறு செய்து அவரை கட்டையால் தாக்கினாராம். இதையடுத்து காயமடைந்த முத்துலட்சுமி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் கோம்பை போலீஸாா் வழக்குப்பதிந்து ஜெயராஜை கைது செய்தனா்.