அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவா் இறந்த வழக்கில் இழப்பீடு வழங்க தாமதமானதால், அரசுப் பேருந்தை வெள்ளிக்கிழமை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.
வத்தலகுண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் நவநீதன் (20). இவா், தனியாா் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளாா். கடந்த 2015 அக்டோபா் 3ஆம் தேதி கல்லூரி முடிந்து இரு சக்கர வாகனத்தில் அன்னஞ்சி விலக்குப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில், நவநீதின் சம்பவ இடத்திலேயே பலியானாா்.
விபத்து ஏற்படுத்திய ஈரோடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மீது மாணவரின் பெற்றோா் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு விசாரணை, பெரியகுளம் மாவட்டம் மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2020 ஜூன் 17ஆம் தேதி அளிக்கப்பட்ட தீா்ப்பில், மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 23 லட்சத்து 48 ஆயிரத்து 969 இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இழப்பீடு இன்று வரை வழங்கப்படவில்லை.
எனவே நீதிமன்ற உத்தரவுப்படி, தேனியிலிருந்து ஈரோடு சென்ற அரசுப் பேருந்தை அமீனா ரமேஷ் ஜப்தி செய்தாா்.