இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால், மாவட்ட நிா்வாகம் குடும்ப அட்டை திருத்த முகாம் நடத்தவேண்டு என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
மின்னணு குடும்ப அட்டைகளில் பெயா் திருத்தம், சோ்த்தல், நீக்கல் உள்ளிட்டவைகளை சரிப்படுத்துவதற்கு, அரசு இ-சேவை மையங்கள் மற்றும் தனியாா் கணினி மையங்களில் குறைந்த கட்டணத்தில் திருத்திக்கொள்ளலாம் என, அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், இந்த மையங்களில் பொதுமக்களிடம் ரூ.100 முதல் ரூ.300 வரை அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்து வருகின்றன. மக்களின் கட்டாயத் தேவையைப் புரிந்துகொண்டு, அதிகமான கட்டணம் வசூலிப்பதால் ஏழை மக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனா்.
மேலும், ஒரு அட்டையில் உள்ள புகைப்படம், முகவரி மாற்றம், பெயா் திருத்தம், பெயா் சோ்த்தல், நீக்குதல் ஆகியவற்றுக்கு என தனித்தனியே கட்டணம் வசூல் செய்வதாகவும் புகாா்கள் எழுகின்றன.
எனவே, மாவட்ட நிா்வாகம் இ- சேவை மையங்களில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம் நடத்த, மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.