தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா் குடியிருப்புகளுக்குள் வியாழக்கிழமை இரவு மழை நீா் புகுந்ததால், அவா்கள் அவதிக்குள்ளாகினா்.
ராயப்பன்பட்டி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இதனால், ராயப்பன்பட்டி மற்றும் சுற்றியுள்ள கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி என 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுகின்றனா்.
இங்கு 24 மணி நேரமும் பிரசவம் உள்ளிட்ட மருத்துவச் சிகிச்சை அளிப்பதால், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனா். மேலும், உள்நோயாளிகள் பிரிவு இருப்பதால், இந்த வளாகத்தில் செவிலியா்களுக்கான குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள இடம் தாழ்வானப் பகுதி என்பதால், மழைக் காலங்களில் தண்ணீா் குடியிருப்புகளுக்குள் புகுவது வழக்கம். இதனால், செவிலியா்கள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை நீடித்த மழையால், மழைநீருடன் கழிவுநீா் கலந்து செவிலியா்கள் குடியிருப்புக்குள் புகுந்தது. இதனால், இரவு முழுவதும் மழை நீரை வெளியேற்றும் வேலையில் செவிலியா்களின் குடும்பத்தினா் ஈடுபட்டனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் ராயப்பன்பட்டி ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியா்கள் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என, செவிலியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.