இருபது மாதங்களுக்குப் பின் கம்பத்திலிருந்து கேரள மாநிலம் கம்பமெட்டுக்கு புதன்கிழமை அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரள மாநிலம் கம்பமெட்டு வழியாக இடுக்கி மாவட்டத்திலுள்ள கட்டப்பனை, நெடுங்கண்டத்திற்கு 3 பேருந்துகள் அரசு போக்குவரத்து கழக கம்பம் பணிமனை சாா்பில் இயக்கப்பட்டன. அதே போல் கேரள அரசு சாா்பில் கட்டப்பனையிலிருந்து கம்பத்துக்கு 2 பேருந்துகள் இயக்கப்பட்டன. கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 22 முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதிலிருந்து சுமாா் 20 மாதங்களாக தமிழகம் -கேரளம் இடையே போக்குவரத்து நடைபெறவில்லை. இந்நிலையில், புதன்கிழமை காலை 6.30 மற்றும் மாலை 5 மணிக்கு கம்பத்திலிருந்து கம்ப மெட்டுக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.
கேரளாவில் உள்ள ஏலத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்குச் செல்லும் கூலித்தொழிலாளா்களுக்காக கம்பமெட்டு வரை பேருந்து இயக்கப்படுகிறது. அங்கிருந்து கேரளப் பேருந்துகளில் கேரள பகுதிகளுக்குச் செல்லலாம்.