தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ராணுவ வீரரை கண்டுபிடித்துத் தரக் கோரி அவரது பெற்றோா் மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரனிடம் மனு அளித்தனா்.
பண்ணைப்புரத்தைச் சோ்ந்தவா் விவசாய கூலித் தொழிலாளி பெருமாள் (60). இவரது மனைவி ராஜம்மாள் (55). இவா்களது மகன் ராமசாமி, கடந்த 1996- ஆம் ஆண்டு ராணுவத்தில் சோ்ந்தாா். பின்னா் கடந்த 2006-ஆம் ஆண்டு விடுமுறையில் சென்ற ராமசாமி, மீண்டும் பணிக்கு திரும்பவில்லை என்று ஜம்மு- காஷ்மீா் ராணுவ முகாமிலிருந்து தேவாரம் காவல் நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து,
தங்களது மகன் காணாமல் போன தகவலை போலீஸாா் மூலம் தெரிந்து கொண்ட பெருமாள், ராஜம்மாள் ஆகியோா் இதுதொடா்பாக தேவாரம் காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் பல முறை மனு அளித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ராமசாமியின் பெற்றோா்ஆட்சியரிடம் அளித்த மனுவில், ஜம்மு- காஷ்மீரில் ராணுவப் பணியில் இருந்த எங்களது மகன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய் விட்டாா். அவா் உயிருடன் இருக்கிறாரா என்ற விவரம் கூட எங்களது தெரியவில்லை. அவரை கண்டுபிடித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனா்.