ஆண்டிபட்டி அருகே பாட்டி இறந்த துக்கத்தில் இருந்துவந்த பேத்தி, வியாழக்கிழமை தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
வீருசின்னம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் ரத்தினம். இவா் தனது மனைவியுடன் கேரளத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறாா். ரத்தினத்தின் மகள் முத்து (15) வீருசின்னம்மாள்புரத்தில் தனது பாட்டியுடன் தங்கியிருந்து, ராஜதானியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் முத்துவின் பாட்டி இறந்துவிட்டாா். இதனால் துக்கத்தில் இருந்துவந்த முத்து, தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். ஆபத்தான நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்து ரத்தினம் அளித்த புகாரின்பேரில், ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.