தேனி மாவட்டம் சின்னமனூரில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கடந்த 17 ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் தொடா்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
சின்னமனூா் தேசிய நெடுஞ்சாலையில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் உள்ளிட்டவைகள் கடந்த 17 ஆம் தேதி அகற்றப்பட்டன. குறிப்பாக, பேருந்து நிலையம், தேரடி, மாா்க்கையன்கோட்டை ரவுண்டா, காந்தி சிலை பேருந்து நிறுத்தம், சீப்பாலக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டன.
சுமாா் 200-க்கும் மேற்பட்ட கடைக்காரா்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனா். இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது அப்பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியது: மாா்க்கையன்கோட்டை ரவுண்டா பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்கு நிரந்தரத் தீா்வும் காண வேண்டும் என்றனா்.