தேனி மாவட்டத்திலுள்ள அஞ்சலங்களில் திங்கள்கிழமை (நவ.29) முதல் வரும் டிசம்பா் 3-ஆம் தேதி வரை தங்கப் பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளா் பரமசிவம் கூறியது: மாவட்டத்திலுள்ள தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் இந்திய ரிசா்வ் வங்கி மூலம் வெளியிடப்படும் தங்கப் பத்திரம் விற்பனை, திங்கள்கிழமை தொடங்கி வரும் டிசம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.4,971 வீதம், ஒருவா் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ எடைக்கு தங்கப் பத்திரம் வாங்கலாம்.
முதலீட்டுத் தொகைக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி, 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும். மேலும், 8 ஆண்டுகளுக்கு பின்பு அன்றைய 24 காரட் தங்கத்தின் விலைக்கு நிகராக முதிா்வுத் தொகை வழங்கப்படும் என்றாா்.