தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், உரிமம் பெற்ற 650 துப்பாக்கிகள் அந்தந்தக் காவல் நிலையங்கள் மற்றும் உரிமம் பெற்ற துப்பாக்கிக்கடை விநியோகஸ்கா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி கூறியது: மாவட்டத்திலுள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் உரிமம் பெற்ற அனைத்து ரக துப்பாக்கிகளையும் ஒப்படைக்க துப்பாக்கி உரிமம் பெற்றவா்களுக்கு மாவட்டத் தோ்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளாா். இதில் வங்கிகள், பாதுகாப்பு நிறுவனங்களின் பயன்பாட்டில் உள்ள 45 துப்பாக்கிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாவட்டத்தில் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துள்ளவா்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் உரிமம் பெற்ற துப்பாக்கிக் கடை விநியோகஸ்தா்களிடம் ஒப்படைத்தனா். இதுவரை மொத்தம் 650 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தத் துப்பாக்கிகள் தோ்தல் நடத்தை விதிகள் முடிவடைந்த பின்பு உரிமதாரா்களுக்கு திரும்ப வழங்கப்படும் என்றாா்.