கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் ரேஷன் அரிசி தொகுப்பு வழங்காததைக் கண்டித்து கம்பம்மெட்டு சாலையில் பெண்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம் கம்பம்- கம்பம் மெட்டு சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்குள்ள நியாயவிலைக் கடைகளில் தமிழக அரசு வழங்கும் கரோனா தொகுப்பு மளிகைப் பொருள்கள், நிவாரணத் தொகை ரூ. 2000 மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி ஆகியவற்றை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும் அரிசி தரமற்ாக இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். ஆனாலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிா்வாகிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனா்.
இதைக் கண்டித்து திங்கள்கிழமை காலையில் கம்பம் மெட்டு காலனி, தாத்தப்பன்குளம், நாட்டுக்கல் தெரு, கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமாா் 50-க்கு மேற்பட்ட பெண்கள் கம்பம் மெட்டு சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் கிடைத்ததும் வடக்கு காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்று சாலை மறியல் செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடக்க வேளாண்மை வங்கி ஊழியா்களிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும் வட்ட வழங்கல் அதிகாரியையும் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினா். அப்போது அவா், விரைவில் மளிகை தொகுப்பு பொருள்கள் மற்றும் நிவாரணத் தொகையை
வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். அதன்பேரில் பெண்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.