தேனியின் பதினெட்டாம் கால்வாயில் உள்ள பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம், போடி தாலுகாக்களில் மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் கடந்த 1999 ஆம் ஆண்டு, 18 ஆம் (பழனிவேல்ராஜன் கால்வாய்) கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்படி லோயர்கேம்ப் தலைமதகிலிருந்து 40.80 கிலோமீட்டர் தூரம் கால்வாய் வெட்டி, முல்லைப்பெரியாற்று தண்ணீரை கூடலூர், கம்பம், உத்தமபாளையம், தேவாரம் வழியாக சுத்தகங்கை ஓடை வரை கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது சுத்தகங்கை ஓடை வழியாக கூவலிங்க ஆறுவரை 14.10 கிலோமீட்டர் நீட்சி என மொத்தம் 54.90 கி.மீ., வரை செல்கிறது. 18 ஆம் கால்வாய் தண்ணீரை கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி கோம்பை, பண்ணைபுரம், தேவாரம், சிந்தலச்சேரி, தே.மீனாட்சிபுரம், சங்கராபுரம், சிலமலை, ராசிங்காபுரம், டொம்புச்சேரி ஆகிய கிராமங்களில் உள்ள 51 கண்மாய்களுக்கு நீர் நிரப்பி, நிலத்தடிநீர் பெருகுவதோடு, நேரடியாக 4 ஆயிரத்து 614.25 ஏக்கர் பரப்பளவிலும் மறைமுகமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும்போதும், அக்டோபர் முதல் தேதிக்குப்பின் இருப்புநீர் 6,250 மில்லியன் கனஅடியாக இருந்தால், 18ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கலாம் என அரசாணை உள்ளது. இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், தமிழகத்திலும் தீவிரமடைந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நீர் இருப்பும் 6,206 மில்லியன் கன அடி உள்ளது, நீர்வரத்தும் தொடர்கிறது. கூடுதலாக சுருளியாறு, வறட்டாறு சுரங்கனாறு நீர்வீழ்ச்சி மூலமும் பெரியாற்றில் அதிக நீர்வரத்து செல்கிறது. மேலும் வைகை அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே 18 ஆம் கால்வாயில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் விவசாய சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.