கம்பம்: குமுளியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ மெழுகுச் சிலை தமிழக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது.
குமுளி தேக்கடிக்கு வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை ஆண்டு முழுவதும் இருக்கும். கரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக, குமுளி தேக்கடி பகுதியில் கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினர் மற்றும் தனியார் நிறுவனத்தினர் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளனர்.
இதில் குமுளி அட்டப்பள்ளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்கரை அடி உயர மெழுகுச் சிலை அனைவரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக தமிழக கேரள சுற்றுலாப் பயணிகளை இது அதிகம் கவர்ந்துள்ளது. அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் புகைப்படம் மற்றும் சுயபடம் எடுத்துக்கொள்கின்றனர்.
மெழுகுச் சிலையை வடிவமைத்த குட்டநாடைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் கூறும் போது, "கரோனா பொதுமுடக்க காலம் பலரை முடக்கிப் போட்டுள்ளது. இதில் சுற்றுலாத் தலங்களை நம்பி வாழ்ந்த பல பேர் வாழ்வாதாரமின்றி உள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக பிரபலங்களின் மெழுகு உருவச் சிலைகளை செய்துள்ளேன். இதில் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிக வரவேற்பு உள்ளது. அவருக்கு உண்மையான தலை முடியை வைத்துள்ளேன்" என்றார்.