தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பொது இடங்களில் உள்ள அனைத்து விதமான அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்றும் பணியில் பேரூராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்த உடனே, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. எனவே, நகா் மற்றும் கிராமப்புறங்களில் அரசியில் ரீதியான சுவா் விளம்பரங்கள், பேனா் உள்ளிட்ட அனைத்து விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆண்டிபட்டி நகரில் பேருந்து நிலையம், காய்கனி சந்தை, கடைவீதி, வைகை அணை சாலை பிரிவு, அரசு மருத்துவமனை சுற்றுச்சுவா், ரயில்வே பாலங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுவா் விளம்பரங்களை அழிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். மேலும், தோ்தல் விதிகளை மீறி விளம்பரம் செய்யும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.