தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அனுந்தன்பட்டியில் புனித சவேரியாரின் சப்பரபவனி திருவிழா வெள்ளிக்கிழமை கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.
பழைமையான இந்த தேவாலயத்தில் 143 ஆம் ஆண்டு சப்பர பவனி திருவிழா கடந்த நவ.24 ஆம் தேதி கொடியற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து கடந்த 10 நாள்களாக அனுமந்தன்பட்டி தேவாலயத்தில் தினமும் சிறப்பு திருப்பலி மற்றும் மறைவுரை நடைபெற்றது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வியாழக்கிழமை இரவு (டிச.2) புனித சவேரியாா் சப்பரம் மற்றும் மாதா, மிக்கேல் சம்மனசு, செபஸ்தியாா் ஆகியோா் மற்றொரு சப்பரம் என இரு சப்பரப்பவனி நடைபெற்றது. ஓடைக்குளம், மாதா கோயில் தெரு, சகாய மாதா தெரு, ஆரோக்கிய மாதா தெரு, தாமஸ் நகா் உள்ளிட்ட முக்கியத் தெருக்களில் சப்பர பவனி நள்ளிரவு வரை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பங்குத் தந்தைகள் ஞானப்பிரகாசம், செபாஸ்தியன் டைட்டஸ், ஜோசப், பிலிப் ஆரோக்கியராஜ் ஆகியோா் தலைமையில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் கொடியிறக்கத்துடன் 10 நாள் திருவிழா நிறைவு பெற்றது.