முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர் மட்டம் உயர்த்தவும், கூடலூர் - மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் சனிக்கிழமை 152 பெண்கள் கோரிக்கை பொங்கல் வைத்து வழிபாடுகள் நடத்தினர்.
தேனி மாவட்டம், கூடலூரில் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், மாவட்ட வழக்கறிஞர் சங்கம், இந்து முன்னணி சார்பில் கோரிக்கை பொங்கல் வழிபாடு நடைபெற்றது. மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் எம்.கே.எம்.முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.
இதையும் படிக்க- இந்தியாவில் மூன்றாவது நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி
விவசாய சங்கத் தலைவர் சதீஷ்பாபு முன்னிலை வகித்தார். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், கூடலூரிலிருந்து மதுரைக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று வழக்கறிஞர் எம்.கே.எம்.முத்துராமலிங்கம் தெரிவித்தார்.
முன்னதாக பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவில் முன்பாக 152 பெண்கள் பொங்கல் வைத்து கோரிக்கைகள் நிறைவேற வழிபாடுகள் நடத்தினர்.