கம்பம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தேனிமாவட்டம் கம்பம், ஒன்றியத்தில் காலியாக உள்ள 51 அங்கன்வாடி பணியாளர், 54 உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு விண்ணப்பம் பெறப்பட்டது. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் நிர்வாக காரணங்களால் பணி நியமனம் செய்யப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
அதே சமயம் கம்பம் ஒன்றியத்தை தவிர்த்து தேனி மாவட்டத்தில் உள்ள மற்ற ஒன்றியங்களில் காலியாக இருந்த பணியிடங்களுக்கான பயனாளிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரடி கண்காணிப்பில் தேர்வு செய்து பணி நியமன உத்தரவை வழங்கினார்.
ஆனால் கம்பம் ஒன்றிய பகுதிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படவில்லை. இதையடுத்து அந்த காலி பணியிடங்களுக்கு மீண்டும் கடந்த 2019ம் வரும் பிப்ரவரி மாதம் பெறப்பட்டு நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை நிரப்பபடாமல் உள்ளன.
எனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.