தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
உத்தமபாளையம் ஒன்றியத்தில் தே.மீனாட்சிபுரம், கோகிலாபுரம், நாகையகவுண்டன்பட்டி, ராமசாமிநாயக்கன்பட்டி, உ.அம்மாபட்டி, பல்லவராயன்பட்டி என 14 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 50 சதவீதம் வரையில் மட்டுமே வீடுகளுக்கு தனித்தனியாக குடிநீா் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்படி அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக அதிகாரிகள் வியாழக்கிழமை முதல்கட்ட ஆய்வு நடத்தினா். குடிநீா் வடிகால் வாரிய அலுவலா் கவிதா, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் ஞான திருப்பதி, வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் உள்ளிட்டோா் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தற்போது செயல்பட்டுவரும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனா்.