தேனி மாவட்டம் கூடலூா் பகுதிகளில் இயந்திரம் மூலம் நெல் நடவு பணிகள் செவ்வாய்க்கிழமை முதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கா் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடிக்காக கடந்த ஆக. 13 இல் பெரியாறு அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.
கூடலுாா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுாா் பகுதியில் நாற்றுகள் வளா்த்து தற்போது நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கூடலுாரில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் பணிகள் தொடங்கின.
தாமரைக்குளம், கப்பாமடை, ஒழுகுபுளி, ஒட்டான்குளம் உள்ளிட்ட பகுதியில் 60 ஏக்கா் வரை இயந்திர நடவு பணிகள் நடைபெற உள்ளன. இயந்திர நடவுக்காக ஏக்கருக்கு 2 ஆயிரம் ரூபாய் வேளாண்துறை மானியம் வழங்குகிறது. இந்த ஆண்டு கூடலுாா் சாமி வாய்க்காலில் பராமரிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் இயந்திர நெல் நடவு பணியும் தாமதமானது .
தொழிலாளா்கள் மூலம் நடவு செய்யும் பணி ஓரளவு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இயந்திரம் மூலம் நெல் நடவுப் பணிகள் தீவிரமாகியுள்ளன.