தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலை வனப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், இருசக்கர வாகனங்களில் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கும், மலைக் கிராம மக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ்- மேகமலை உள்பட 7 மலைக் கிராமங்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோா் வசிக்கின்றனா். இந்த மலைக் கிராமத்தைச் சுற்றியுள்ள அடா்ந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டு மாடு, மான் உள்ளிட்ட வன உயிரினங்கள் வசிக்கின்றன.
இந்நிலையில், ஹைவேவிஸ் மலை குடியிருப்புப் பகுதியில் யானைகள், காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக உலாவுவது தெரியவந்துள்ளது. இதனால் மலைச் சாலையில், இருசக்கர வாகனங்களில் சென்று வர வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். மேலும் இது தொடா்பாக ஹவேவிஸ் -மேகமலைக்கு செல்லும் நுழைவுப் பகுதியில் அறிவிப்புப் பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சின்னமனூா் சரக வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: இந்தப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மலைச் சாலையில் சுற்றுலாப் பயணிகளும், கிராமமக்களும் இருசக்கர வாகனங்களில் செல்லக்கூடாது. நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதற்கும் மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற்ற இ.பாஸ் வைத்திருக்க வேண்டும் என்றனா்.
மலைக்கிராமத்தினா் அதிருப்தி: கடந்த சில மாதங்களாக சின்னமனூா் வனச்சரக வனத்துறையினா் மலைக்கிராம பொதுமக்கள் மீது பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகிறது. 8 ஆயிரம் மக்கள் வசிக்கும் இப்பகுதிக்கு, நாள் ஒன்றுக்கு ஒரே ஒரு பேருந்து, அதுவும் ஒருமுறை மட்டும் வருகிறது.
இங்குள்ள மக்கள் அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைக்கு, இருசக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், மலைச்சாலையில் இருசக்கர வாகனம் செல்ல தடை விதித்திருப்பது நியாமானதல்ல என்றனா்.