தேனி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனைகளில் கிட்டத்தட்ட 60 சதவீத மக்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது என்று துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலக மருத்துவர் அஜித் சாமுவேல் தெரிவித்தார்.
தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி பகுதியில் கரோனா நோய் எதிர்ப்பு புரதங்கள் கண்டறியும் இரத்த பரிசோதனை முகாம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை செய்வதன் மூலம் சாதாரண பொதுமக்களிடம் எதிர்ப்பு சக்தியின் அளவினை கண்டறிய முடியும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆலோசனைப்படி பொதுமக்களுக்கு கொரோனா நோய்க்கான நோய் எதிர்ப்பு புரதங்களான ஆண்டிபாடிகள் எனப்படும் இம்யூனோ குளோபுலின் ஜி எந்த அளவிற்கு பொதுமக்களிடம் உள்ளது என்பதனை கண்டறிய இரத்தத்திலுள்ள சீரத்தை பிரித்து அதில் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது.
இதன்மூலம் கொரோனா பெருந்தொற்றிலிருந்து எவ்வளவு விரைவில் மீண்டு வர முடியும் என்பதனை கணிக்க முடியும். பரிசோதனை முகாமில் மருத்துவ அலுவலர்கள் சுதா, முருகானந்தம், மேற்பார்வையாளர் கண்ணன், ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர், ஆய்வக நுட்பனர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை செய்தனர்.
இதுகுறித்து துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலக மருத்துவர் அஜித் சாமுவேல் கூறியது, ஆட்சித் தலைவர் மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஆலோசனையின் படி மொத்தம் 14 இடங்களில் பரிசோதனை இரண்டு பகுதிகளாகப் பிரித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த முடிவுகள் மூலம் கரோனா பெருந்தொற்றிலிருந்து எவ்வளவு விரைவில் சமூகம் மீளமுடியும் என்பதனைக் கணிக்க முடியும் என்றார்.