போடியில் விஜயதசமியை முன்னிட்டு திங்கள்கிழமை, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பள்ளிகளில் குழந்தைகளை சோ்க்கவும், கல்வி கற்பித்தலை தொடங்குவதற்கும் விஜயதசமி தினம் ஏற்ற நாளாகக் கருதப்படுகிறது. இதனையொட்டி போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அரிசி மற்றும் நெல் தானியங்களில் எழுத்துக்கள் எழுதி பழக்கப்பட்டது. மேலும் பூஜையில் வைத்து குழந்தைகளுக்கு பென்சில், பேனாக்கள் வழங்கப்பட்டன. இதேபோல் போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் விஜயதசமி பூஜை நடைபெற்றது.