தேவாரம் அருகே சனிக்கிழமை, சாக்குலத்துமெட்டு மலைச்சாலை அமைக்க அனுமதி வழக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தேவாரம் அருகே உள்ளது சாக்குலத்து மெட்டு. இந்த மலைப்பகுதி தமிழகம், கேரளத்தை இணைத்து வருகிறது.
இந்த மலைச்சாலை அமைத்தால் கேரளத்துக்கு எளிதில் சென்று வரலாம். இப்பகுதி வனப்பகுதியாக உள்ளதால் தேனி மாவட்ட வனத்துறை சாலை அமைக்க அனுமதி மறுத்து வருகிறது. இதனை கண்டித்தும், மலைச்சாலை அமைக்க நடவடிக்க வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நடைபயணம் மற்றம் முற்றுகைப் போராட்டம் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமையில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், அசோகர் பசுமை இயக்க தலைவர் அ.திருப்பதிவாசகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச் செயலர் பொன் காட்சி கண்ணன், செயலர் சலேத்து, தேவாரம் பகுதி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முருகன், தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேவாரத்திலிருந்து நடைபயணமாக விவசாயிகள் சென்றனர்.
காவல்துறையினர் அனுமதிக்காததால் வாகனங்களில் சாக்குலத்து மலை அடிவாரப் பகுதியில் வனத்துறை எல்லையான திருச்சங்கனகுன்று வரை சென்று அங்குள்ள பெருமாள் கோவில் அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.