நெல்லூரில் இருந்து சபரிமலைக்கு நடைபயணமாக மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தர் இன்று 73ஆவது நாளாக பெரியகுளத்தை வந்தடைந்தார்.
ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் (45). இவருக்கு திருமணமாகவில்லை. இவரின் தாய் மற்றும் தங்கை உள்ளனர். தங்கைக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இவர் தனது தாயுடன் நெல்லூரில் வசித்து வருகிறார். இவர் தங்க நகைகள் செய்யும் வேலைகளை செய்து வருகிறார்.
இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன் இருசக்கரவாகன விபத்தில் இடது கால் முறிவு ஏற்பட்டு, கால் அகற்றப்பட்டது. இந்த நிலையில் கால் இல்லாத நிலையில் சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த செப்டம்பர் மாதம் நெல்லூரில் இருமுடி கட்டி தனது பயனத்தை துவக்கியுள்ளார். இவர் வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்கும் வகையில் இணையதளத்தில் பதிவு செய்து வைத்துள்ளார்.
இவர் எப்போதும் ஜதரபாத்தில் உள்ள குரூப்புடன் கடந்த 22 வருடமாக வாகனத்தில் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வருகிறார். இந்த நிலையில் கால் இல்லாத நிலையில் நடைபயணமாக செல்ல வேண்டும் எனக் கூறி தனியாக பயனத்தை துவக்கியுள்ளார். அப்போது இவரது குடும்பத்தினரும் இவரை ஊக்கப்படுத்தி வழியனுப்பி வைத்துள்ளனர்.
கால் இல்லாத நிலையில் ஐயப்பனை தரிசிக்க செல்லும் இவரை பெரியகுளம் பகுதி மக்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.