தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி வளாகத்தில், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் அனைத்துப் பகுதிகளும் புதன்கிழமை மூடப்பட்டது.
கம்பம் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் புண்ணியத் தலமாக விளங்குவது சுருளி அருவி. இங்கு தேனி மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், செவ்வாய்க்கிழமை முதல் சுருளி அருவிப் பகுதிக்குச் செல்ல வனத்துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திற்கு உள்பட்ட அருவியின் வளாகப்பகுதியில், விருந்தினா் மாளிகை, நீத்தாா் நினைவு காரிய வளாகம், சிறுவா் பூங்கா, உணவுக்கூடம் போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மலா்விழி, சந்திரசேகரன் ஆகியோா் பாா்வையிட்டு வளாகப் பகுதிகளை பன்படுத்தவும் தடை விதித்தனா். மேலும் வாகனக் கட்டணம் வசூலிக்கும் அலுவலகம், சோதனைச்சாவடி ஆகியவையும் மூடப்பட்டன.