தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் ரமேஷ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சிவ.முத்துக்குமாரசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகாதேவி, மாவட்ட வழங்கல் அலுவலா் காா்த்திகேயினி, உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் நவநீதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் நுகா்வோா் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் குடிமக்கள் நுகா்வோா் மன்றங்களிடையே நடைபெற்ற பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற 39 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.