தேனி: கம்பம் அருகே தொட்டமன்துறை என்று அழைக்கப்படும் சலவைத் துறையில் கோயில் பீடம் இடிக்கப்பட்டதாக புகாா் தெரிவித்து திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கம்பம் பென்னிகுவிக் சலவைத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்: கம்பம்-சுருளிப்பட்டி சாலை முல்லைப் பெரியாற்றங்கரையில் உள்ள தொட்டமன்துறை என்று அழைக்கப்படும் சலவைத் துறையில் சலவைத் தொழிலாளா்கள் கட்டுப்பாட்டில் கருப்பசாமி, பெத்தனசாமி, நாகம்மாள் மற்றும் காளியம்மாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு மின்சாரம் மற்றும் குடிநீா் குழாய் இணைப்பு பெற்றுள்ளோம்.
இந்நிலையில், சலவைத் தொழிலாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்குப் பின்புறம் தனி நபா்கள் இருவா் மாசாணியம்மன் கோயில் கட்டி வருகின்றனா். இந்தக் கோயிலுக்காக சலவைத் தொழிலாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் வளாகம் மற்றும் பீடத்தை பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி இடித்துள்ளனா்.
இதுகுறித்து உத்தமபாளையம் வட்டாட்சியரிடம் புகாா் மனு அளித்துள்ளோம்.
சலவைத் தொழிலாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள 100 ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பசாமி கோயில் இடம், கிராம கணக்கில் இடம் பெற்றுள்ளதற்கான ஆதாரங்களை அளித்தும் வட்டாட்சியா் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.