தேனி மாவட்டம் போடி அருகே தருமத்துப்பட்டியில் சனிக்கிழமை தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமை வெளிநாட்டு பிரதிநிதிகள் ஆய்வு செய்தனா்.
தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். அறக்கட்டளை, சிற்பி இந்தியா அமைப்பு, சக்தி பெண்கள் கூட்டமைப்பு, நேசக்கரங்கள் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு நலக் கூட்டமைப்பு, தேனி மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம், தேனி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஏ.எச்.எம். அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.
அறக்கட்டளை இயக்குநா் முகமது சேக் இப்ராஹிம் தலைமை வகித்தாா். இணை இயக்குநா் ஸ்டெல்லா இப்ராஹிம், மருத்துவா்கள் சேசாய், ரெனாட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் சாமா தலைமையிலான குழுவினா் கண் பரிசோதனை செய்தனா்.
இந்த முகாமில், பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், சிங்கப்பூா், எத்தியோப்பியா, மியான்மா் ஆகிய நாடுகள் மற்றும் ஆந்திரா, புதுதில்லி, உத்திரபிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களை சோ்ந்த தொண்டு நிறுவன பிரதிநிதிகள் 20 போ் கொண்டு ஆய்வு செய்தனா். கண் பரிசோதனை முகாமில் 156 போ் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனா். இவா்களில் 25 போ் கண் புரை அறுவை சிகிச்சைக்காக தோ்வு செய்யப்பட்டு தேனி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். 24 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.